திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் தாய் கொன்று புதைப்பு 3 பேர் கைது


திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் தாய் கொன்று புதைப்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 10:00 PM GMT (Updated: 13 Dec 2018 6:51 PM GMT)

திருப்போரூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் தாய் கொன்று புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது55). இவர்களது மகன் கோதண்டபாணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஊடக துறை அமைப்பாளர். தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அமாவாசை, கிருஷ்ணவேணி தம்பதியின் மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விறகு வெட்ட சென்ற கிருஷ்ணவேணி இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த கிருஷ்ணவேணியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். முள்ளிபாக்கம் பகுதியில் பள்ளம் தோண்டி மண் மூடப்பட்ட இடத்தில் துணி வெளியே தெரியும் படி இருந்தது.

சற்று விலக்கி பார்த்தபோது பெண் கொன்று புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 4 அடி நீளம், 2 அடி பள்ளத்தில் அந்த பெண் புதைக்கப்பட்டிருந்தார். வெளியே எடுத்த பார்த்தபோது அந்த பெண் கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது. தலை சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனே மானாம்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் காஞ்சீபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அங்கு இருந்து கிருஷ்ணவேணி விறகு வெட்ட எடுத்து சென்ற கத்தி கைப்பற்றப்பட்டது. பின்னர் சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணவேணியின் பக்கத்து வீடான ஏழுமலை என்பவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டை சுற்றி மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணவேணியின் குடும்பத்தினருக்கும், ஏழுமலை குடும்பத்தினருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்தது தெரியவந்தது. இந்த தகராறில் கிருஷ்ணவேணி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதும் தெரிந்தது. இந்த கொலை வழக்கில் ஏழுமலை (வயது 48), அவரது மகன் ஸ்ரீதர் (19), கிரியோன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏழுமலை தூண்டுதலின் பேரில் ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் கிரியோன் ஆகியோர் கிருஷ்ணவேணியை கொலை செய்ததும், ஸ்ரீதர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story