தஞ்சை மீன்மார்க்கெட் பராமரிக்கப்படுமா? பொதுமக்கள்-வியாபாரிகள் எதிர்பார்ப்பு


தஞ்சை மீன்மார்க்கெட் பராமரிக்கப்படுமா? பொதுமக்கள்-வியாபாரிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 7:34 PM GMT)

தஞ்சை மீன்மார்க்கெட் பராமரிக்கப்படுமா? என பொதுமக்கள்-வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் மீன்மார்க்கெட் செயல்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் செயல்பட்ட இந்த மீன்மார்க்கெட்டை இடப்பற்றாக்குறை, துர்நாற்றம், சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களுக்காக இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. கீழவாசல் ராவுத்தாபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2001-ம் ஆண்டு புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டது.

ஆனால் மக்கள் வரமாட்டார்கள் என்பதை காரணம் காட்டி மீன் வியாபாரிகள் செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று புதிய மீன்மார்க்கெட்டிற்கு செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி 2008-ம் ஆண்டு புதிய மீன்மார்க்கெட் திறக்கப்பட்டது. இந்த மீன்மார்க்கெட்டிற்கு நாகை, தூத்துக்குடி, ராமேசுவரம், சென்னை, கன்னியாகுமரி மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் விற்பனைக்காக வருகின்றன.

இந்த மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. 15 மொத்த வியாபாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மீன்வெட்டும் தொழிலாளர்களும் உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன்மார்க்கெட் திறந்திருக்கும்.

மீன்மார்க்கெட் திறக்கப்பட்டு இதுவரை ஒருமுறை கூட பராமரிப்பு பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால் மார்க்கெட் சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. தகரத்தினால் போடப்பட்ட மேற்கூரைகள் உடைந்துள்ளன. இதனால் மழை காலங்களில் மேற்கூரைகளில் உள்ள ஓட்டைகளின் வழியாக தண்ணீர் மார்க்கெட் உள்ளே விழுகிறது. மீன்வாங்க வரும் பொதுமக்கள் மழையில் நனையும் நிலை உள்ளது.

மீன்வெட்டும் இடத்தில் முறையான வடிகால் மற்றும் போதிய இடவசதி இல்லாததால் மீன்வெட்டும் கடைகளையொட்டி கழிவுகளின் மீதே மக்கள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கட்டிடத்தில் ஆங்காங்கே செடிகளும், மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளன. சில இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.

அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மீன்மார்க்கெட் என அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய மீன்மார்க்கெட் மாநகராட்சி, சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாக சீரழிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், மீன் வியாபாரிகள், மீன்வெட்டுவோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே கட்டிடத்தை பராமரிப்பதுடன், மார்க்கெட் பகுதி சுகாதாரமாக திகழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள்-வியாபாரிகளின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து மீன்வியாபாரிகள் சிலர் கூறும்போது, மழை காலங்களில் மார்க்கெட்டிற்குள் நுழையவே முடியாத அளவுக்கு கழிவுநீருடன், மழைநீரும் கலந்து நிற்கும். மீன் கழிவுகளை உடனுக்குடன் மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்கி சுகாதாரம் இல்லாததால் பொதுமக்கள், மீன் வாங்குவதற்கு வரவே அஞ்சுகின்றனர். கூடுதல் பணமாக இருந்தாலும் பரவாயில்லை. துர்நாற்றத்தில் இருந்து தப்பித்தால் போதும் என வெளியிலேயே மீன்களை வாங்கி கொள்வதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

நவீன மீன்மார்க்கெட் என கூறி தான் இங்கே வர சொன்னார்கள். ஆனால் கட்டிடம் ஒழுகுகிறது. தண்ணீர் வசதி, வடிகால் வசதி, கழிவறை வசதி எதுவும் முறையாக இல்லை. எனவே கட்டிடங்களை பராமரிக்க வேண்டும். மேற்கு பக்கம் பயன்படாமல் உள்ள கழிவறையை இடித்துவிட்டு பாதை அமைக்க வேண்டும் என்றனர்.

Next Story