நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:23 PM GMT (Updated: 18 Dec 2018 11:23 PM GMT)

வைகுண்ட ஏகாதசியை யொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்யபூஜை நடந்தது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாக கூடையில் வைத்து ஜடாரியை கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கோஷங்கள் எழுப்பி, சாமியை தரிசனம் செய்தனர். இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, சப்-கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். குறிப்பாக நாமக்கல் மெயின் ரோட்டில் இருந்து பஸ்நிலையம் வழியாக பூங்கா சாலை வரை நீண்ட தூரத்துக்கு பொதுமக்கள் காத்திருந்து தரிசனம் செய்வதை காண முடிந்தது. நேற்று காலையில் கடும் குளிர் நிலவியபோதும் அதை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.

சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. இதற்காக 54 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.

இதையொட்டி கோவில் முன்பும், சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் இலவச பாஸ் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.25-ம், விரைவு தரிசனத்திற்கு ரூ.100-ம் வசூல் செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல் பிரதான சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story