மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு


மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 19 Dec 2018 10:45 PM GMT (Updated: 19 Dec 2018 3:22 PM GMT)

மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் ஈழத்துவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலை ராஜேசின் ஆட்டோ, கக்கோட்டு குளக்கரை பகுதியில் நின்றது. காலையில் குளத்துக்கு குளிக்க சென்ற அப்பகுதி மக்கள் ஆட்டோ அனாதையாக நிற்பதை கண்டனர். அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, குளத்துக்குள் ராஜேஷ் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


பின்னர், இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story