ராஜபாளையம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக் கொன்ற தொழிலாளி; போலீசில் சரண் அடைந்தார்


ராஜபாளையம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக் கொன்ற தொழிலாளி; போலீசில் சரண் அடைந்தார்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:20 PM GMT (Updated: 19 Dec 2018 10:20 PM GMT)

ராஜபாளையம் அருகே சொத்துக்காக தாயை வெட்டிக் கொலை செய்த தொழிலாளி போலீசில் சரண் அடைந்தார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மனைவி பார்வதி அம்மாள் (வயது 60), இவர்களுடைய மகன்கள் சிவகாமிநாதன் (45), புதுராஜன், மகாலிங்கம்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடராஜன் இறந்து போனார். ஆனால் அவர், தனது மகன்களுக்கு ரூ. 3 லட்சத்தையும், குடியிருக்கும் சொந்த வீட்டையும் பிரித்து கொள்ளுமாறு சொன்னதாக கூறப்படுகிறது.

இதில் மூத்த மகனான பனை ஏறும் தொழிலாளி சிவகாமிநாதன், தனக்கு உரிய பங்கு பணத்துடன் வீட்டையும் கேட்டு தனது தாயாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக அடிக்கடி தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று வீட்டில் தனியாக பார்வதி அம்மாள் இருந்துள்ளார். அங்கு வந்த சிவகாமிநாதன், வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி தாயிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவகாமிநாதன், வீட்டில் கிடந்த அரிவாளால் தாயின் கழுத்தில் வெட்டி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பார்வதி அம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனடியாக சிவகாமிநாதன் சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். பார்வதி அம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்துக்காக பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story