கருங்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


கருங்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 9:20 PM GMT)

கருங்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

கருங்கல் மங்கலக்குன்று பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

மேலும் கருங்கல் பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதேபோல் புதுக்கடை பகுதியிலும் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. புதுக்கடை, கருங்கல் பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்த கிரண்ராஜ் (வயது 19) என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

கிரண்ராஜும், அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சால்வின்மோன் (21) என்பவரும் சேர்ந்து கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கிரண்ராஜ், சால்வின் மோன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார், கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருங்கல் போலீசார், வாலிபர்கள் இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்கு மேலும் பல திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story