வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் - ரூ.2 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் - ரூ.2 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 10:56 PM GMT (Updated: 26 Dec 2018 11:22 PM GMT)

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று வேலூர் மாவட்டத்தில் வங்கிகள் மூடப்பட்டது. பல வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வராக்கடன் வைத்துள்ள பெரு முதலாளிகளின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும், அனைத்து வங்கி அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், வாரத்தில் 6 நாள் வேலை என்பதை 5 நாட்களாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதில் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று வங்கிகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. பல வங்கிகள் மூடப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் பலர் வங்கிகளுக்கு சென்றபோது எந்த பணிகளும் நடக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி னர். இதனால் வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி கூட்டமைப்பினர் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சம்பத்குமார், ரஜனி, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், ஆனந்த், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கைகளை விளக்கி கோஷங்களை எழுப்பினர்.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story