விழுப்புரத்தில், மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


விழுப்புரத்தில், மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 8:57 PM GMT)

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சந்துரு (வயது 26), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மதில் சுவரில் ஏறி அங்கிருந்த முருங்கை மரத்தின் கிளையை முறிக்க முயன்றார்.

அப்போது மரக்கிளையை முறித்துவிட்டு கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர்அழுத்த மின்கம்பியின் மீது மரக்கிளை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு பலத்த காயமடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்துரு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story