அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்


அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 3 Jan 2019 10:45 PM GMT (Updated: 3 Jan 2019 8:45 PM GMT)

அறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 39). இவர் குளிர்பானம், சோப்பு உள்ளிட்ட பொருட்களின் ஏஜென்சி உரிமையை எடுத்து அறந்தாங்கி பகுதியில் உள்ள கடைகளுக்கு சில்லரையாக கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் பொருட்களை வைக்கும் குடோன் மற்றும் அலுவலகம் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநாவுக்கரசு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் இரண்டு சாக்கு மூட்டைகளில் வைத்திருந்த சில்லரை நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அலுவலகம் வெளியே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்து எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story