பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:17 PM GMT (Updated: 11 Jan 2019 11:17 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில்,

பண்டிகை காலம் மற்றும் விழாக்கால விடுமுறையின்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் கடுமையாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி நடைபெற இருக்கிறது. எனவே வெளிமாவட்டங்களில் வசிக்கும் குமரி மாவட்டத்தினர் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு வரவாய்ப்புள்ளது.

இதை எதிர்கொள்ள வசதியாக அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் நாகர்கோவிலில் இருந்து கோவை மற்றும் மதுரைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 14-ந் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது.

சென்னையில் இருந்து 55 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 20 சிறப்பு பஸ்களும், மதுரைக்கு 70 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் குமரி மாவட்டம் வந்த வெளிமாவட்ட மக்கள் மீண்டும் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வசதியாக வருகிற 16-ந் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story