மதுரை அருகே மெக்கானிக் படுகொலை; 2 பேர் கைது


மதுரை அருகே மெக்கானிக் படுகொலை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2019 10:30 PM GMT (Updated: 16 Jan 2019 8:28 PM GMT)

மதுரை அருகே விளாச்சேரியில் மெக்கானிக் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி, ஆதிசிவன்நகரை சேர்ந்தவர் கவுதம்ராஜா (வயது 25). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளாச்சேரி மொட்டமலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கவுதம்ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவுதம்ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார். பட்டப்பகலில் நடந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அதே பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, 2 பேர் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் விளாச்சேரியை சேர்ந்த சேது (23), அவரது நண்பர் கரண் (23) என்பதும், கவுதம்ராஜாவை கொலை செய்த நபர்கள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட கவுதம்ராஜாவிற்கும், சேதுவிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சேதுவின் அண்ணன் சமீபத்தில் இறந்துபோனார். அவரது சாவுக்கு கவுதம்ராஜா காரணமாக இருந்தாராம். இதனால் பழிக்குப்பழியாக சேது, தனது நண்பருடன் சேர்ந்து கவுதம்ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.


Next Story