பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது


பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 16 Jan 2019 11:45 PM GMT (Updated: 16 Jan 2019 11:15 PM GMT)

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

பழனி,

தீராத வினைகளை தீர்த்தருளும், கலியுக வரதனான ஞானதண்டாயுதபாணியின் 3-ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், 14-ந்தேதி இரவு ராக்கால பூஜைக்கு பின்னர் கிராமசாந்தி பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து தெற்குரதவீதி, மேற்குரதவீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்றது. பின்னர் கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

இதைத்தொடர்ந்து கொடி படத்துக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் கொடிப்படத்துடன் கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார்.

கொடிக்கட்டு மண்டபத்தில் விநாயகர் பூஜை, கொடி பூஜை, வாத்திய பூஜை நடந்தது. பின்னர் கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் ஓதுவார்கள், கோவில் குருக்கள்கள், பண்பாடி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு மேல் உச்சிகால பூஜையில் திருஆவினன் குடிகோவில், மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவாரபாலகர்களுக்கு காப்புக்கட்டு நடந்தது. பூஜைகளை கோவில் குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர். விழாவையொட்டி தினமும் காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

விழாவில் 6-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி இரவு 7.45 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி, நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ம் திருநாளான வருகிற 21-ந் தேதி தைப்பூசம் ஆகும்.

அன்று காலை 5 மணிக்கு மேல் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல், காலை 10 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு பிறகு தேரோட்டம் தொடங்குகிறது. விழாவின் 10-ந் திருநாளான 24-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவு பெறுகிறது.

தைப்பூசத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சக்திவேல், மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேல், அடிவாரம் கந்தவிலாஸ் செல்வக்குமார், ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், பழனி நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story