இண்டூர் பகுதியில், வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


இண்டூர் பகுதியில், வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2019 10:15 PM GMT (Updated: 20 Jan 2019 8:20 PM GMT)

இண்டூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குட்டி(வயது 49). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு உடல்நலம் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இண்டூர் அருகே உள்ள கழனிகாட்டூரைச் சேர்ந்தவர் குப்பாகவுண்டர் (வயது 80). இவர் மனைவி இறந்து விட்டதால் அதேபகுதியில் உள்ள மகள் மாதம்மாள் வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று இரவு முதியவர் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அப்போது அங்கு சென்ற மற்றொரு மகள் தங்கம்மாள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர், தந்தையை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story