தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.21 லட்சம் கையாடல்; மேலாளர்கள் 3 பேர் கைது போலி ரசீது தயாரித்து கொடுத்தது அம்பலம்


தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.21 லட்சம் கையாடல்; மேலாளர்கள் 3 பேர் கைது போலி ரசீது தயாரித்து கொடுத்தது அம்பலம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:45 PM GMT (Updated: 22 Jan 2019 9:14 PM GMT)

திருப்பூரில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து கொடுத்து ரூ.21 லட்சம் கையாடல் செய்த மேலாளர்கள் 3 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக நாகராஜன்முருகன் பணியாற்றி வருகிறார். இதே கிளையில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடாபாத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 30), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்பாபு (54), திருப்பூர் கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர்(30), மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்கள் கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதை நிறுவனத்துக்கு செலுத்தாமல், அதற்கு போலியாக ரசீது தயாரித்து கொடுத்து கையாடல் செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் சம்மதம் இல்லாமல் அவர்களின் பாலிசிகளையும் ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த மேலாளர் நாகராஜன் முருகன் இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் 5 பேரும் சேர்ந்து போலியாக ரசீது தயாரித்து கொடுத்ததுடன் பாலிசிகளை ரத்து செய்து வாடிக்கையாளர்கள் 30 பேரிடம் ரூ.21 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்குமார், வெங்கடேஷ்பாபு, திவாகர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story