தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு ரூ.20 கோடி வழங்கி உள்ளது துணைவேந்தர் தகவல்


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு ரூ.20 கோடி வழங்கி உள்ளது துணைவேந்தர் தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:00 PM GMT (Updated: 26 Jan 2019 7:05 PM GMT)

ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு ரூ.20 கோடி வழங்கி உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பிரமணியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள், வெளியிடப்பட்ட நூல்கள் ஆகியன ஆய்வுலகில் நமக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. நாம் நமது பெருமையை தக்க வைத்துக்கொள்வதற்கு நம்மை மறு அர்ப்பணிப்பு செய்து கொள்ள வேண்டியுள்ளது. கடந்த நான்கு மாத கால அளவில் பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.

தேசிய தர மதிப்பீட்டு நிர்ணய குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைபுரிந்து 2.52 புள்ளிகளை தந்து ‘பி பிளஸ்’ என்ற நிலையை அறிவித்துள்ளது. தமிழ்ப்பல்கலைக்கழக எதிர்கால திட்டங்களை வகுப்பதற்காக ஒரு வல்லுனர் குழு கூட்டம் கூட்டப்பட்டு அக்குழுவின் பரிந்துரைகளை ஆட்சிக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்த வளர்ச்சி திட்டங்களுக்கான அரசு ஆணைகளை வழங்கி மிகுந்த ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கி வருகிறது.

ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ரூ.20 கோடி வழங்குவதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்தொகையில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதம் ஆகும். இந்த தொகையை பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வதற்கும், நூல்கள், ஆய்வுக்கருவிகள் வாங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த திட்டத்தின் கீழ் நிதி இதுவரை உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக தமிழ்ப்பல்கலைக்கழகம் இந்த நல்கையை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இவ்வாறுஅவர் பேசினார். 

Next Story