குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் பறிமுதல் 2 பெண்கள் கைது


குவைத்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் பறிமுதல் 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 5:28 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பெண்களை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

ஆனால் அவர்களிடம் இருந்த உடைமைகளில் எதுவும் இல்லை. 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று, பெண் சுங்க இலாகா அதிகாரிகள் மூலம் சோதனை செய்தனர்.

அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் துண்டிக்கப்பட்ட 5 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.53 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 560 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் யாருக்காக அந்த தங்க கட்டிகளை குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story