காரியாபட்டி அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு


காரியாபட்டி அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM GMT (Updated: 5 Feb 2019 10:12 PM GMT)

காரியாபட்டி அருகே கொத்தடி தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள வரலொட்டி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் கொத்தடிமைகளாக சிறுவர்கள் பணியமர்த்தப்படுவதாக தகவல் வந்ததன் பேரில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. செல்லப்பா தலைமையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன், காரியாபட்டி தாசில்தார் ராமசுந்தர் மற்றும் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கார்த்திகேயன் ஆகியோர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது வரலொட்டியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் பார்த்தசாரதி (வயது 13), சதீஷ் (11), மணிகண்டன் (8) ஆகிய 3 பேரும் ஒப்பந்த அடிப்படையில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரையும் மீட்ட ஆய்வுக்குழுவினர் அவர்கள் 3 பேரையும் விருதுநகர் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்த 3 சிறுவர்களையும் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்திய நபர் மீது 1976–ம் வருடத்திய கொத்தடி தொழிலாளர் சட்டத்தின்படியும், குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சிறுவர்களை பணியில் அமர்த்தினாலோ, கொத்தடிமை முறையில் வேலையில் ஈடுபடுத்தினாலோ அந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் எச்சரித்து உள்ளார்.

தொடர்ந்து இந்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story