லால்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


லால்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 7:43 PM GMT)

லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர்.

லால்குடி,

லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, நேற்று லால்குடி கொடிக்கால் தெருவில் நடைபெற்றது. இதையொட்டி மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணிக்கு கோட்டாட்சியர் பாலாஜி தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வீரர்களை பந்தாடிவிட்டு சென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு மொபட், சைக்கிள், பீரோ, நாற்காலி, பிரிட்ஜ், தங்க காசு, வெள்ளிகாசு, பாத்திரங்கள், ஹெல்மெட் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பசுமை விழிப்புணர்வாக அனைத்து காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தலா 2 மரக்கன்றுகளை விழாக்குழுவினர் வழங்கினர்.

ஜல்லிக்கட்டில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், தம்மம்பட்டி, துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 631 காளைகள் மற்றும் உள்ளூர் கோவில் காளைகள் 15 என மொத்தம் 646 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க பதிவு செய்திருந்த 373 பேரில் 8 பேர் உடற்தகுதி அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு, 365 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு குழுவாக களமிறங்கினர்.

இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆனந்திமேடு பகுதியை சேர்ந்த மருதை மகன் அருண்குமார் (23) மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லால்குடி தாசில்தார் சத்தியபாலகங்காதரன் மற்றும் அதிகாரிகள் விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடக்கிறதா? என்று கண்காணித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் கள் முத்துக்குமாார், தினேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Next Story