ஜவ்வாதுமலை அருகே லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது


ஜவ்வாதுமலை அருகே லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 6:49 PM GMT)

ஜவ்வாதுமலை அருகே லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை தாலுகா கோவிலூர் பேராற்றுகொல்லை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் சின்னபையன், இலவச மின் இணைப்புக்காக எஸ்.டி. சான்றிதழ், உண்மை அறியும் சான்றிதழ் கேட்டு நிம்மியம்பட்டு வருவாய் ஆய்வாளர் தசரதனிடம் (வயது 57) விண்ணப்பித்து உள்ளார். அவர் கடந்த 3 மாதங்களாக சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று அலைந்து வந்தார்.

இந்த நிலையில் சின்னபையனிடம் சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் ஆய்வாளர் தசரதன், ரூ.7 ஆயிரத்து 500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் அது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

போலீசார் ஆலோசனையின்படி வருவாய் ஆய்வாளரிடம் அவர் கேட்ட ரூ.7 ஆயிரத்து 500-ஐ தருவதாக சின்னபையன் கூறினார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய சின்னபையன் அதனை கொடுப்பதற்காக வருவாய் ஆய்வாளர் தசரதனை தொடர்பு கொண்டார். ஜவ்வாதுமலை தாலுகா அலுவலகத்துக்கு வரும்படி கூறவே அவர் அங்கு பணத்துடன் சென்றார்.

அவரை பின் தொடர்ந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத், சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் சென்றனர்.

சின்னபையன், தாலுகா அலுவலகத்தில் வைத்து வருவாய் ஆய்வாளர் தசரதனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய் ஆய்வாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கைதான தசரதன் ஓய்வு பெற இன்னும் 1 வருடம் தான் உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story