கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா: பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்


கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா: பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:30 PM GMT (Updated: 11 Feb 2019 7:35 PM GMT)

கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரும், திருமாமுடீஸ்வரரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம், 

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்திற்கு நேற்று அதிகாலை புறப்பட்டு வந்தார். கலசபாக்கம் செய்யாற்றின் தென்பகுதியில் உள்ள தென்பள்ளிப்பட்டு மற்றும் மேட்டுபாளையம் கிராம மக்கள் அருணாசலேஸ்வரருக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்து ஆற்றுத் திருவிழாவிற்கு அழைத்து சென்றனர்.

செய்யாற்றின் வடகரையில் உள்ள கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனாகிய திருமாமுடீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அருணாசலேஸ்வரரும், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரரும் ஆற்றின் இருகரையில் இருந்து எதிர் எதிரே இறங்கி ஆனந்த நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திருமாமுடீஸ்வரரும், அருணாசலேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் கலசபாக்கம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் கலந்து கொண்டு சூலத்திற்கு சங்கல்பம் செய்தார். பின்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் தீர்த்தவாரி நடந்த புனிதநீரை தெளித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவில் விழா குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Next Story