ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 5 அகதிகள் சிக்கினர் உதவிய ஏஜெண்டு– ஆட்டோ டிரைவரும் கைது


ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 5 அகதிகள் சிக்கினர் உதவிய ஏஜெண்டு– ஆட்டோ டிரைவரும் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 10:30 PM GMT)

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 5 அகதிகள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் சுங்க இலாகாவினர் தனுஷ்கோடி பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகாவினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் கணேசன் (வயது 60), அவரது மனைவி சோமாலை, மகள்கள் குமுதினி (31), மலர் (28), இவரது மகன் ஜெகன்(10) என்பதும், அவர்கள் அனைவரும் இலங்கை அகதிகள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக உடைச்சியார்வலசை கிராமத்தில் வசித்து வரும் ஏஜெண்டு ஆனந்த், தெற்குக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 40) என்பவரது ஆட்டோவில் அழைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் சுங்க இலாகாவினர் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது போலீசாரிடம் கணேசன் கூறியதாவது:– நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கிளிநொச்சி பகுதியில் இருந்து அகதியாக இங்கு வந்து மதுரை ஆணைமலை முகாமில் தங்கி இருந்தோம். அங்கு எனது 2 மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்களது கணவர்கள் அவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதையடுத்து நாங்கள் முகாமில் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் எனது மகன் இலங்கையில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்த்து வருகிறான். இதனால் நாங்கள் அங்கு சென்று விடலாம் என்று எண்ணி ஏஜெண்ட் ஆனந்த்தை அணுகினோம். அவர் எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக கூறி தலா ரூ.25,000 வீதம் 5 பேருக்கும் ரூ.1¼ லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.

தனுஷ்கோடி சென்று இலங்கையில் இருந்து வரும் படகில் எங்களை அனுப்பி வைப்பதாக கூறி அழைத்து வந்தார். அப்போது சுங்க இலாகாவினர் எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலோர போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story