அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபர் கால்வாயில் பிணமாக மீட்பு


அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபர் கால்வாயில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 3:12 PM GMT)

அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபரின் பிணம் கால்வாயில் மிதந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே மயிலாடி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் சபரி சரவணன் (வயது21), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10–ந் தேதி மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சபரி சரவணனை போலீசார் தேடி வந்தனர். 

இந்தநிலையில், மயிலாடி அருகே உசரவிளையில் புத்தனாறு கால்வாயில் நேற்று காலையில் குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பிணமாக கிடந்தவர் சபரி சரவணன் என்பது தெரிய வந்தது. அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை.

இதையடுத்து பிணத்தை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரி சரவணன் கால்வாயில் கால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story