சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:48 PM GMT)

சேங்கல் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசேங்கல் இந்திராநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நீர்எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதிலிருந்து குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டபோதும் அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், அவதிப்பட்டு வந்த அப்பகுதிமக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, நேற்று காலை சின்னசேங்கல் கடைவீதி பகுதியில் ஒன்று திரண்டு சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பிரபாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story