கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2019 11:30 PM GMT (Updated: 13 Feb 2019 7:45 PM GMT)

செங்குன்றம் அருகே, கல்லூரி கட்டணம் செலுத்தாத விரக்தியில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவருடைய மகன் யுகாஷ் (வயது 16). இவர், கவரப்பேட்டை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

கல்லூரி கட்டணம் செலுத்தவேண்டும் என தனது தந்தையிடம் கூறினார். அதற்கு அவர், தற்போது பணம் இல்லை. கிடைத்த உடன் கட்டிக்கொள்ளலாம் என மகனிடம் கூறியதாக தெரிகிறது.

நேற்று காலை யுகாசின் பெற்றோர், செங்குன்றம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த யுகாஷ், கல்லூரி கட்டணம் செலுத்தவில்லையே என்ற விரக்தியில், வீட்டின் கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய யுகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையிலேயே மாணவர் யுகாஷ், கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story