பள்ளி மாணவி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது


பள்ளி மாணவி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 10:00 PM GMT (Updated: 15 Feb 2019 8:09 PM GMT)

பொதட்டூர்பேட்டை அருகே பள்ளி மாணவி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் அருகே புதுவெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி 5 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனார். கடந்த 11-ந் தேதி கீச்சலம் பகுதியில் உள்ள வாய்க்காலில் சில எலும்புகளையும், பள்ளி சீருடையும் அந்த பகுதியில் கிடைத்தன. பின்னர் மாணவியின் பெற்றோர் முன்னிலையில் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு காணாமல்போன மாணவியின் கொலுசு, கம்மல், செருப்பு போன்றவை கிடைத்தன.

அதன் பிறகு மாணவி கொலைக்கு காரணமான சங்கரய்யா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கீச்சலம் கிராமத்தை சேர்ந்த நாதமுனி (வயது 42), கிருஷ்ணமூர்த்தி (40), ஜெகதீஷ் (41), மோகன்ராஜ் (43) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா மற்றும் 4 பேரும் மாணவியை கீச்சலம் கிராமம் அருகே உள்ள மாந்தோப்பு நடுவே உள்ள ஒரு குடோன் போன்ற வீட்டில் 5 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று மாலை அந்த வீட்டை அடித்து நொறுக்க கூட்டமாக சென்றனர். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். வீட்டை இடிக்க முயன்றவர்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த கொலைவழக்கில் அந்த வீடு முக்கிய தடயம் என்றும், அதை அழிக்கக்கூடாது என்றும் போலீசார் தெரிவித்தனர். அந்த வீடு காவல்துறை சார்பில் சீல் வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story