கள்ளக்காதல் விவகாரம், தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி


கள்ளக்காதல் விவகாரம், தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 6:14 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்து மனைவி கொலை செய்தார். மேலும் அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசில் கூறியதாவது:-

போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த ஒருபெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

பாபுராஜின் செல்போனில் வேறொரு பெண்ணின் படம் இருப்பதை பாக்கியம் பார்த்துள்ளார். இது பற்றி கேட்ட போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இது பற்றி விசாரித்த போது பாபுராஜின் செல்போனில் இருந்தது அவருடைய கள்ளக்காதலியின் படம் என்பது பாக்கியத்திற்கு தெரிய வந்தது. இதன் காரணமாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் பாபுராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாக்கியம் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள் ளிரவு 12 மணியளவில் பாபுராஜ் குடிபோதையில் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். உடனே கதவை திறந்த பாக்கியம், பாபுராஜை பார்த்ததும் வீட்டுக்குள் வரக்கூடாது. கள்ளக்காதலி வீட்டுக்கே செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் பீர் பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயன்றதாக தெரிகிறது. உடனே பாக்கியம் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் பாபுராஜின் தலையில் ஓங்கி அடித்தார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காமல் கத்தியால் பாபுராஜை குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.

பின்னர் கணவரை கொலை செய்து விட்டோமே என்ற பயத்தில் பாக்கியம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்த கொசு விரட்டி மருந்து, மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை கரைத்து குடித்தார். மேலும் உடைந்து கிடந்த பீர்பாட்டிலை எடுத்து கையில் கீறியும் தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

அதிகாலை 4 மணியளவில் தாயை மூத்த மகள் தேடினார். அங்கு, தாய், தந்தை ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாபுராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலைக்கு முயன்ற பாக்கியத்துக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த பாக்கியம், போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

என் கணவருக்கு ஒரு பெண்ணுடன் கடந்த ஒரு ஆண்டாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் வாரம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார். குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும் இருந்தார். இதனால் 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தேன். கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்தேன். இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கணவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அவரது செல்போனில் கள்ளக்காதலியுடன் அவர் நெருக்கமாக இருக்கும் படத்தை பார்த்து விட்டேன். இதனை நான் கண்டித்ததற்கு அந்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கூறினார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென்று அவர் பீர்பாட்டிலை எடுத்து உடைத்து என்னை தாக்க முயன்றார். நான் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் தாக்கி கத்தியால் கழுத்தில் குத்தி கொன்றேன். பின்னர் தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பாக்கியம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்த கணவரை உருட்டுக்கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் மனைவியே கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story