2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு


2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 10:01 PM GMT)

2-வது நாளாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதையொட்டி, திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி,

பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்திட வேண்டும், 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும், 2-வது ஊதிய மாற்றுக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அஸ்லம்பாஷா, சஞ்சார்நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சசிக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் தொலை தொடர்பு எக்சேஞ்ச் அலுவலகங்களும், வாடிக்கையாளர் சேவை மையமும் மூடியே இருந்தது. தரைவழி தொலைத்தொடர்பு சேவை மற்றும் இணையவழி சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் இருந்தன. தொடர் பராமரிப்பில் ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சேவை குறைபாடு ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் புகார் செய்தாலும் அதை பதிவு செய்வதற்கு யாரும் இல்லை.

குறிப்பாக வங்கிகள், ரெயில்வே துறை ஆகியவற்றில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட், தரைவழி சேவைகள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கும் சேவை குறைபாடு ஏற்பட்டது. மேலும் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையும் பாதிக்கப்பட்டது. செல்போனில் பேசுவது முழுமையாக கேட்காததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும்(புதன்கிழமை) 3-வது நாளாக நடக்கிறது. இன்று சேவை முற்றிலும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்றைய போராட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக வந்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேச உள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story