பிரதமர் மோடி 1-ந் தேதி குமரி வருகை மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்


பிரதமர் மோடி 1-ந் தேதி குமரி வருகை மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 9:34 PM GMT)

குமரிக்கு பிரதமர் மோடி மார்ச் 1-ந் தேதி வருகிறார். இதனையொட்டி நடந்து வரும் மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

தென்தாமரைகுளம்,

பிரதமர் மோடி வருகிற மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். இவர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும், கட்சி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதனையொட்டி அங்கு அரசு நிகழ்ச்சிக்காக ஒரு மேடையும், பா.ஜ.க. கட்சி பொதுக்கூட்டத்திற்காக இன்னொரு மேடையும் அருகருகே அமைக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க. கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகில் 6 அடி உயரத்தில் தாமரைப்பூ ஒன்று சிமெண்டால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேடை அமைக்கும் பணிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியுடன் பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் தே.மு.தி.க.வும் எங்களோடு இணைவது உறுதி. இந்த கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தாங்கள் தலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயற்கை தான். ஆனால் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை பொறுப்பு வகிக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியோடு விளையாடுவது குறித்து தேர்தல் விளையாட்டு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story