விவசாயிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது பற்றி 8-ந் தேதி அறிவிக்கப்படும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


விவசாயிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது பற்றி 8-ந் தேதி அறிவிக்கப்படும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2019 11:15 PM GMT (Updated: 3 March 2019 8:03 PM GMT)

விவசாயிகள் சார்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து வருகிற 8-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

புதுக்கோட்டை,

வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் நிலைப்பாடு மற்றும் அரசியல் கட்சியினர் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு காண வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் பிரசார பயணம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பிரசார பயணம் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தது. பின்னர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பொதுமக்களிடம் பேசினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்கள் விரோத போக்கில் செயல்பட்ட பா.ஜ.க.வோடு தமிழகத்தில் கூட்டணி சென்று உள்ள எந்த கட்சிக்கும் விவசாயிகள் வாக்களிக்கமாட்டார்கள். இது தெரிந்தே பா.ஜ.க. தனியாக நின்றால் வாக்குகள் விழாது என கருதிதான் ஆளுகின்ற அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணி அமைத்து உள்ளது. பா.ஜ.க.வோடு கூட்டணி சென்றவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விவசாய நலம் சார்ந்த திட்டங்கள் அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடாமல் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும். விவசாயிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து வருகிற 8-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும். அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று நான் முடிவு எடுத்து இருந்தேன். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அரசியலில் ஈடுபடுவது என்பது முக்கியமானதாக உள்ளது.

பிரதமர் மோடி இலவசங்கள் வழங்க மாட்டேன், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மாட்டேன் எனக்கூறி வந்தவர். தற்போது ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். எனவே இது ஒரு மோசடி திட்டம் அவர்களுக்கு மோடி ரூ.6 ஆயிரம் இலவசமாக வழங்கலாம். ஆனால் விவசாயிகள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story