கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் - முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் - முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது
x
தினத்தந்தி 5 March 2019 11:30 PM GMT (Updated: 5 March 2019 7:01 PM GMT)

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிராஜன் (வயது 25), சிவில் என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் முகநூல் (பேஸ்புக்) மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சபரிராஜன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு உன்னிடம் தனியாக பேச வேண்டும் உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். காதலனின் பேச்சை நம்பி அந்த மாணவி சென்றார். அங்கு சபரிராஜன் தனது நண்பர்களான மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் திருநாவுக்கரசு (27), சூளேஸ்வரன்பட்டி மாரியப்பன் என்பவரது மகன் சதீஷ் (28), பக்கோதிபாளையம் தங்கராஜ் என்பவரது மகன் வசந்தகுமார் (24) ஆகியோருடன் காரில் காத்திருந்தார்.

மாணவி அங்கு சென்றதும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு 4 பேரும் தாராபுரம் ரோட்டில் சென்றனர். காரை திருநாவுக்கரசு ஓட்டினார். முன்புற சீட்டில் சதீஷ் உட்கார்ந்து இருந்தார். பின்புற சீட்டில் அந்த மாணவி, அருகில் சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் உட்கார்ந்தனர். கார் சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் அந்த மாணவியின் மேலாடையை வலுக்கட்டாயமாக கழற்றியதாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

காதலனின் இந்த செயலால் மாணவி அதிர்ந்துபோனார். தன்னை விட்டு விடும்படி அந்த மாணவி 4 பேரிடமும் கெஞ்சி உள்ளார். ஆனால் அந்த 4 பேரும் காருக்குள் மாணவியை எடுத்த வீடியோவை காண்பித்து கேட்கிற பணத்தை கொடுக்க வேண்டும். இதை வெளியில் சொன்னால் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அதற்கு மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறிஉள்ளார். இதையடுத்து அந்த 4 பேரும் மாணவி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர். பின்னர் காரில் இருந்து மாணவியை இறக்கி விட்டு சென்றனர்.

மாணவி அந்த வழியாக சென்றவர்களின் உதவியுடன் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு 4 பேரும் ஆபாச படத்தை காண்பித்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். இதுபற்றி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் 24-ந்தேதி அந்த மாணவி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், விருப்பம் இல்லாமல் ஆபாச படம் எடுத்தல், வழிப்பறி, பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 25-ந்தேதி ஜோதி நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருநாவுக்கரசுக்கு சொந்தமான காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் திருநாவுக்கரசு போலீசில் சிக்காமல் தலைமறைவானார்.

தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் குற்றவாளி அல்ல என்பது போன்று ஆடியோவையும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வீடியோவையும் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருநாவுக்கரசு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் மாக்கினாம்பட்டிக்கு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொள்ளாச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் அருகே தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நேற்று காலை 10 மணிக்கு திருநாவுக்கரசின் கார் வந்தது.

உடனே போலீசார் காரை தடுத்து நிறுத்தி திருநாவுக்கரசை கைது செய்தனர். பின்னர் அவரை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.பி.ஏ. பட்டதாரியான திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். ஆபாச படம் எடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story