நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 8:37 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 189 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படடது. இதில் 4,12,303 ஆண் வாக்காளர்கள், 4,35,831 பெண் வாக்காளர்கள், 55 இதர வாக்காளர்கள் அடங்குவர். அதன் பின்னரும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் தேர்தலையொட்டி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றிய காவல்துறை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது, வாக்குசாவடி உள்ளிட்ட இடங்களில் தேர்தலுக்கான ஆட்கள் நியமனம் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் கரூர் மாவட்டத்தில் நடந்த கடந்த கால தேர்தல்கள் பற்றி எடுத்துரைத்து, பதற்றமான வாக்குசாவடிகளை கையாள்வது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சில வழிமுறைகளை அதிகாரிகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக, தமிழத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன. அங்கிருந்து உரிய பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் கரூரிலுள்ள மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தலா 250 கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான வி.வி.பேட் என்கிற 600 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரியும், கண்காணிப்பு அதிகாரியுமான கணேஷ், உதவி கலால் ஆணையர் மீனாட்சி, தேர்தல் வட்டாட்சியர் சிவக்குமார், மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் மேற்பார்வையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டன. பெங்களூரு பாய்லர் ஆலையில் இருந்து வந்த என்ஜினீயர், பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளை சரிபார்த்தனர். அப்போது சிலவற்றில் சிறு, சிறு பழுது இருப்பது கண்டறியப்பட்டதும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டது.

100 சதவீதம் தரமாக எந்திரங்கள் இயங்குகின்றது என்பதை உறுதிபடுத்திய பின்னரே, அவற்றை அதிகாரிகள் எடுத்து வைத்தனர். சரிபார்ப்பு பணி நடந்த அறையில், வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டிருந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் சரிபார்ப்பு பணி நடக்கும் எனவும், இது போல் பல கட்ட சரிபார்ப்புக்கு பிறகு தான் தேர்தல் நாள் அன்று இந்த எந்திரங்கள் வாக்குப்பதிவுக்காக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story