திருமணம் நடைபெற இருந்த நிலையில் குளிக்கச்சென்ற மணமகன் கிணற்றில் பிணமாக மிதந்தார்


திருமணம் நடைபெற இருந்த நிலையில் குளிக்கச்சென்ற மணமகன் கிணற்றில் பிணமாக மிதந்தார்
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 9:45 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டியில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் குளிக்கச்சென்ற மணமகன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி,

கவுந்தப்பாடி அருகே உள்ள மின்னவேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராசாக்கவுண்டர். அவருடைய மகன் வெங்கிடுசாமி (வயது 42). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டது. மேலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.

இந்த நிலையில் வெங்கிடுசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று(புதன்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் வீட்டார் நேற்று முன்தினம் இரவே கோவிலுக்கு சென்று மண்டபத்தில் தங்கியிருந்தனர். அதன்பின்னர் இரவு 1 மணி வரை திருமண சடங்குகள் நடைபெற்று வந்தது. பிறகு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வெங்கிடுசாமி குளித்துவிட்டு வருவதாக உறவினர்களிடம் கூறிச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் கோவில் மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமகனை தேடிச்சென்றனர். பகல் 10 மணி அளவில் வெங்கிடுசாமியின் ஒரு செருப்பு மட்டும் அந்த பகுதியில் உள்ள தரைமட்ட கிணறு அருகே கிடந்ததை பார்த்தனர்.

உடனே ஓடோடிச்சென்று கிணற்றிற்குள் அவர்கள் எட்டிப்பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. கிணற்று தண்ணீரில் வெங்கிடுசாமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி இறங்கி கிணற்றில் இருந்து வெங்கிடுசாமியின் உடலை மீட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கிடுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குளிப்பதாக கூறிவிட்டு சென்ற வெங்கிடுசாமி கிணற்று அருகே உள்ள மரத்தில் பல் துலக்குவதற்காக வேப்பம் குச்சியை பறிக்க முயன்றபோது கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் மணமகன், மணமகள் வீட்டாரை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story