அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு


அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 14 March 2019 10:15 PM GMT (Updated: 14 March 2019 6:56 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சியில் கடந்த 1952-ம் ஆண்டிற்கு முன்பு தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட அங்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்தை ஒட்டியவாறு நிலங்கள் அளிக்கப்பட்டது. இதில் அணையின் மேற்புறம் உள்ள சோக்காடி ஊராட்சியில் காடு வனப்பகுதியில் 75 குடும்பத்தினருக்கு இடம் வழங்கப்பட்டது.

அவ்வாறு தற்போது 185 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு மற்றும் நிலங்களுக்கு உரிய பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. 3 தலைமுறைகளாக பட்டா கேட்டு போராடி வரும் கிராம மக்கள், எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருவதால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

அணை கட்ட நிலம் கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர் இங்கு குள்ளன்கொட்டாய், ஜம்பூத்து, காட்டுபெருமாள் கோவில், ஆலமரத்துக்கொட்டாய், கெடிவெங்கட்ராமன் கோவில் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இதில், 500-க்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும், 64 ஆண்டுகளாக வீட்டிற்கு, நிலத்திற்கு பட்டா வழங்க கோரி பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு நில அளவீடு செய்து பட்டா வழங்க ஆணை வழங்கி, 9 ஆண்டுகள் கடந்தும் அளவீடு செய்யாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். பட்டா இல்லாத காரணத்தால் அரசின் சலுகைகள், வேளாண் மானியங்கள் என எங்களுக்கு எந்தவித பலனும் இல்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறு, குறு விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் நாங்கள் ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை. எங்களது குழந்தைகளும் 12-ம் வகுப்பிற்கு பிறகு மேல் கல்வி கற்க முடிவதில்லை. சாலை, குடிநீர் வசதிகள் இல்லாததால் அவதியுற்று வருகிறோம்.

அணைக்கு நாங்கள் வழங்கிய நிலம் மூலம் இன்று நமது மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் நாங்கள் எந்தவித வசதியில்லாமல் தவித்து வருகிறோம். எனவே பட்டா மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story