பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 9:16 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகையை அடுத்த செல்லூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மாணவ, மாணவிகள் நாகை புதிய பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், ரமேஷ்குமார், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார்கள் மாணவ-மாணவிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் நாகை-செல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மாணவ, மாணவிகளை அங்கிருந்து கலைந்து செல்லும் படி கூறினர். இந்த மறியல் போராட்டத்தால் நாகை-செல்லூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story