குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் வெளியேறும் குடிநீர் பொதுமக்கள் புகார்


குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் வெளியேறும் குடிநீர் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 16 March 2019 10:45 PM GMT (Updated: 16 March 2019 5:03 PM GMT)

குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு சரிசெய்யப்படாததால் இரவில் வீணாக சாலையில் குடிநீர் வெளியேறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ‘ஜிக்கா’ குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. ‘ஜிக்கா’ திட்டத்தின் கீழ் பதிக்கப்படும் குழாய்களில் பிரத்யேக கருவி இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருவி, மின்மோட்டார் மூலம் யாரேனும் குடிநீரை எடுத்தால் அவர்களுக்கான இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவிடும். இந்த நிலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட பிரதான குழாயில் இருந்து மென்டோன்சா காலனி, போடிநாயக்கன்பட்டி, திருமலைசாமிபுரம், சுக்காமேடு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிதாக இணைப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் இணைப்பு கொடுக் கப்பட்ட பிறகும் அப்பகுதிகளுக்கு குடிநீர் சரியாக வரவில்லை என அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரதான குழாய் அமைந்துள்ள இடத்தில் சுமார் 5 அடி பள்ளம் தோண்டி குழாய் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் அப்போதும் தண்ணீர் வரவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பள்ளமும் மூடப்படவில்லை.

வழக்கமாக அப்பகுதிகளுக்கு இரவில் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதன்படி கடந்த சில நாட்களாக பிரதான குழாய் மூலம் மெங்கில்ஸ் ரோடு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் பிரதான குழாயில் புதிதாக இணைக்கப்பட்ட குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய குடிநீர் சாலையில் வீணாக செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பள்ளத்தின் அருகிலேயே கழிவுநீர் கால்வாயும் செல்கிறது. இரவில் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பும்போது கழிவுநீரும் அதில் கலக்கிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

பள்ளம் இருப்பது தெரியாமல் ஆடு, மாடுகளும் உள்ளே விழுகின்றன. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீரை வீணடிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, மெங்கில்ஸ் ரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் நாளை மறுநாளுக்குள் (அதாவது நாளை) மூடப்பட்டு விடும். அதற்கு முன்பு குழாயில் ஏற்பட்ட நீர்க் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story