உடுமலை பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நீராதாரங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்


உடுமலை பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நீராதாரங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 9:27 PM GMT)

உடுமலை பகுதியில் வறட்சியின் பிடியில் நீராதாரங்கள் உள்ளன. இதனால் கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளன. இந்த அணைகளுக்கு மழைகாலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்்வரத்து ஏற்படுகின்றது. அதை தவிர்த்து திருமூர்த்தி அணைக்கு மட்டும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த அணைகளை நீ்ராதாரமாக கொண்டு கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் தென்னை, வாழை, நெல், கரும்பு, சப்போட்டா, கொய்யா, மற்றும் அவரை, கத்தரி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் இந்த அணைகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தளவு கை கொடுக்காததால் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு விட்டன. இதனால் அணைகளுக்கு வந்து கொண்டிருந்த நீர்்வரத்து நின்று விட்டதால் நீர்் இருப்பு குறைந்து வருகிறது.

இதன் காரணமாக அணைகளின் பெரும்பாலான பகுதிகள் மண்திட்டுக்கள், பாறைகள் மற்றும் வறண்ட நிலமாகவும் காட்சி அளிக்கின்றன. ஆனால் பி.ஏ.பி அணைகளின் தயவால் திருமூர்த்தி அணை நீர்இருப்பை பெற்று வருகிறது. அதை கொண்டு 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் கடுமையான வெப்பத்தின் தாக்குதல், தண்ணீர் திருட்டு, கால்வாய்கள் சீரமைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீர்இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பி.ஏ.பி பாசன திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் கூடுதலாக கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றுப்பாசனத்தை கொண்டுள்ள விவசாயிகள் ஓரளவிற்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் கடும் வெப்பத்தால் கடந்த சில நாட்களாக கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடிநீர் இருப்பு வேகமாக சரிந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஆழ்துளைகிணறுகளில் இருக்கின்ற தண்ணீரை மோட்டார்கள் மூலமாக இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் உடுமலை பகுதியில் இரவு பகலாக மின்மோட்டார்கள் ஓட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின்சாரத்தேவை அதிகரித்துள்ளதால் மின்தடை ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கடும் வறட்சியால் உடுமலை, மடத்துக்குளம் பகுதியை சுற்றி உள்ள பெரும்பாலான குளங்களில் நீர்இருப்பு குறைந்து விட்டது. பெதப்பம்பட்டி குளம் வறண்டு ஆங்காங்கே மண்திட்டுகளாக காட்சியளிக்கிறது.அத்துடன் வறட்சியின் காரணமாக பயிர்களுக்கு நாளுக்குநாள் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் விளைச்சல் குறைந்து விடுவதற்கான சூழல் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் வெப்பச் சலனத்தின் காரணமாக மழைப்பொழிவு ஏற்படுமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story