நாகர்கோவிலில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்ட வாகனம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை


நாகர்கோவிலில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்ட வாகனம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 3:46 PM GMT)

நாகர்கோவிலில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்ட வாகனத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் நேற்று மதியம் தாசில்தார் பாண்டியம்மாள் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ஷாஜி உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வந்தது. அதன் முன் பகுதியில் அ.தி.மு.க. கொடி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டு, இரட்டை இலை சின்னமும் வரையப்பட்டு இருந்தது.


அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி அ.தி.மு.க. சின்னம் வரைய தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என கேட்டனர். ஆனால் டிரைவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலைய பகுதியில் கொண்டுபோய் நிறுத்தினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story