தோகைமலையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


தோகைமலையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 March 2019 11:00 PM GMT (Updated: 28 March 2019 9:21 PM GMT)

தோகைமலையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை வேதாசலபுரத்தில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களுக்கு போர்வெல் அமைத்து தோகைமலை ஊராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வினியோகம் செய்து வந்தது. தற்போது வறட்சியின் காரணமாக போர்வெலில் நீர்மட்டம் குறைந்ததால், இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் தோகைமலை ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள தோகைமலை பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களை வைத்து மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், தோகைமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதில் ஒரு வாரத்திற்குள் குடிநீர் தட்டுபாட்டை போக்கவும், சட்ட விரோதமாக குடிநீரை உருஞ்சும் மின் மோட்டார்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கபடும், மேலும் வேதாசலபுரத்திற்கு லாரிகளில் உடனே குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story