போலியான நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


போலியான நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 April 2019 11:00 PM GMT (Updated: 2 April 2019 8:52 PM GMT)

போலியான நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி, மதம், மற்றும் மொழியினரிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது. அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தனிநபர் விமர்சனம் செய்தல் கூடாது. சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது. வழிபாட்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்களை ஒருசாரருக்கே வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அச்சுறுத்தவும் கூடாது.

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தேர்தல் பிரசாரத்தின் போது சமமான ஆரோக்கியமான போட்டியிடும் சூழலை அனைத்து வேட்பாளர்களுக்கும் உருவாக்கிடவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், பரிசுகள், வேட்டிசேலைகள், போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பணம், பொருள் எதுவும் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் தேர்தல் விதிமுறைகளின் படி வாக்காளர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் சுதந்திரமாகவும், நியாமாகவும், நடைபெறுவதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story