தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படுகிறது ஏழை விவசாயிகளுக்கு 5 பவுன் வரை நகை அடமான கடன் தள்ளுபடி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படுகிறது ஏழை விவசாயிகளுக்கு 5 பவுன் வரை நகை அடமான கடன் தள்ளுபடி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2019 11:30 PM GMT (Updated: 3 April 2019 8:03 PM GMT)

ஏழை விவசாயிகளுக்கு 5 பவுன் வரை நகை அடமான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக திருப்பூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

திருப்பூர் அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர். அதனால்தான் இதற்கு பெயரே திருப்பூர் என்று அமைந்திருக்கின்றது. இதே திருப்பூரில், 1934–ம் ஆண்டு, மாநாடு ஒன்று நடைபெற்றிருக்கிறது. அந்த மாநாட்டிற்கு ஒரு பெரியவர் வந்திருந்தார், அதே மாநாட்டிற்கு ஒரு இளைஞரும் வந்திருந்தார். அந்த இளைஞரைப் பார்த்து பெரியவர் ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அப்படி கேட்ட நேரத்தில் அந்த இளைஞர் சொன்னார், நான் பட்டப்படிப்பு முடித்து இருக்கின்றேன் என்று சொன்னார். உடனே பெரியவர் பட்டப்படிப்பு முடித்திருக்கின்ற காரணத்தால் ஏதாவது வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா என்று, ஒரு கேள்வியைக் கேட்டார்.

உடனே, அந்த இளைஞர் இல்லை நான் வேலை தேடிக்கொண்டிருக்கவில்லை என்று சொன்னார். உடனே அந்த பெரியவருக்கு ஆச்சரியம் வந்துவிட்டது. படித்து பட்டம் வாங்கிவிட்டு வேலை தேடவில்லை என்று சொல்லுகின்றீர்களே? என்று ஆச்சரியத்தோடு கேட்டார். அதற்கு அந்த இளைஞர் சொல்லுகின்றார். நான் வேலை தேடி அலையவில்லை வேலைக்கும் போக மாட்டேன், சமூகத்தொண்டு ஆற்றிடப்போகின்றேன் என்று சொன்னார். உடனே, அந்த பெரியவர் ஆச்சரியத்தோடு தட்டிக்கொடுத்து, அப்படி என்றால் நீங்கள் என்னோடு வருவீர்களா? என்று கேட்ட நேரத்தில், தாராளமாக வருகின்றேன் என்று சொன்ன அந்த இளைஞர் பெரியவரோடு புறப்பட்டார். 1934–ம் ஆண்டு அந்த பெரியவரோடு புறப்பட்ட இளைஞன் தான் 1967–ல் தமிழகத்தின் முதல்–அமைச்சராக வந்து உட்கார்ந்த அறிஞர் அண்ணா.

அந்த இளைஞரை, தன்னோடு அழைத்துச் சென்ற பெரியவர் தான் பெரியார். ஈரோட்டில் பிறந்த பெரியார், காஞ்சீபுரத்தில் பிறந்த அண்ணா, இந்த இருவரையும் சந்திக்க வைத்த ஊர்தான் திருப்பூர். திருப்பூரில் அவர்கள் சந்தித்துக்கொண்ட காரணத்தினால் தான் ‘‘தமிழ் சமுதாயமே விடுதலை பெற்று இருக்கின்றது’’. தமிழனுக்கு சொரணை வந்தது, தமிழனுக்கு உணர்ச்சி வந்தது, தமிழன் தன்மானத்தோடு நடக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்தது, இந்த பெருமை மட்டுமல்ல, நம் தலைவர் கருணாநிதியை நாம் இவர்கள் மூலமாகத்தான் பெற்றிருக்கின்றோம்.

‘‘ஓட்டு என்பது ஒரு ஓட்டு தான்’’. ஆனால், அது ஒரு ஓட்டு அல்ல, இந்த நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய ஓட்டு என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இந்தியாவில், ஆட்சி மாற்றத்தை உருவாக்கித் தருவதற்கு அதன்மூலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு, உங்களின் பங்கை உங்கள் ஆதரவை நீங்கள் வழங்கிட வேண்டும். தேர்தல் நடத்தக்கூடிய ஆணையம் இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா? என்றால் அது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

4 நாட்களுக்கு முன்பு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை. அவரின் அலுவலகத்தில் சோதனை, அவரது மகன் நடத்தக்கூடிய கல்லூரியில் சோதனை என்று புறப்பட்டு காலை 8 மணியில் இருந்து மறுநாள் காலை 8 மணி வரை நடந்தது. அப்படி நடைபெற்ற சோதனையில் ஏதாவது கண்டுபிடித்தார்களா? தவறான காரியங்களில் ஈடுபட்டார்கள் என்று ஏதேனும் செய்திகள் வெளிவந்ததா? ஒருநாள் முழுவதும் சோதனையிட்டு இருக்கின்றார்கள். ஒரு நாள் முழுவதும் வேட்பாளராக இருக்கக்கூடிய நம் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எங்கும் வாக்குகள் சேகரிக்க செல்ல முடியவில்லை. அதிகாரிகள், கேட்கின்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். எதுவும் இல்லை என்று சொல்லி போய் விட்டார்கள்.

ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் அடுத்த தினம் வருகின்றார்கள். அப்பொழுது எங்கோ யாருடைய வீட்டிலோ பணத்தை பறிமுதல் செய்து விட்டதாக சொல்கிறார்கள். இப்பொழுது எங்களுக்கு வந்து கொண்டிருக்கக்கூடிய செய்தி, வேலூர் நாடாளுமன்ற தேர்தலை நிறுத்த வேண்டும் என்று 2 நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்தி வந்ததைப் பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை, இன்னொரு செய்தி ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. அது என்னவென்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடைபெறக்கூடிய ஆம்பூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் சேர்த்து நிறுத்தப் போகின்றார்களாம். அதையும் சேர்த்து நிறுத்தினால் என்ன ஆகும்? தி.மு.க நிச்சயம் அந்த தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறது உறுதி. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

எனவே, தி.மு.க.வை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து 97 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இந்த பதினெட்டிலும் வெற்றி பெற்றுவிட்டால், 115 இடம் நமக்கு கிடைத்துவிடும். ஏற்கனவே தினகரன் அணியில் மூன்று – நான்கு பேர் இருக்கின்றார்கள். அந்த கட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருந்தவர்கள். 2 பேர் விலகி இருக்கின்றார்கள். அதெல்லாம் பார்த்தால் அ.தி.மு.க.வின் நிலை 100–க்கு கீழ் வந்து விடுகின்றது. இந்த நிலையில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் ஆகி விடுகின்றார்கள். எனவே, இதற்காகத்தான் திட்டமிட்டு செய்கின்றார்கள்.

எனவே, இந்த தேர்தல் கமி‌ஷனை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, நீங்கள் மோடிக்கு துணை போய்க்கொண்டிருந்தால் பின்னால் வேறுவிதமான விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயமாக வரும். நான் இதை மிரட்டுவதற்காக சொல்லவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படையில் சொல்லுகின்றேன்.

நிலமற்ற ஏழை விவசாயிகள் தங்கள் குடும்ப செலவுக்காக மூக்குத்தி, கம்மல், தாலி செயின் போன்ற ஆபரணங்கள் பல ஆண்டுகளாக மீட்கப்படாமல் கூட்டுறவு வங்கி பொதுத்துறை வங்கிகளில் அடமானத்தில் இருக்கின்றது. ஒரு கிராம் முதல் 5 பவுன் வரையில் அடமானத்தில் இருக்கும் நகைகளுக்கான கடனை தள்ளுபடி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்கள். எனவே, இந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அறிக்கையில் இணைக்கப்போகின்றோம் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுகின்றேன். விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற பொழுது, தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படத்தான் போகின்றது. அப்படி ஏற்படுகின்ற நேரத்தில், திட்டங்களை, சாதனைகளை, பணிகளை, மக்களின் பிரச்சினைகளை, மக்களின் குறைபாடுகளை அத்தனையும் தீர்த்து வைக்கப்போகின்றோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story