மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி


மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:10 PM GMT)

மரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் (வயது 46) ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார். தி.மு.க. சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆன ரித்தீஷ், 2014-ல் அ.திமு.க.வில் இணைந்து மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக இருந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றிலும் பொறுப்புகளில் இருந்தார். ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரித்தீஷ் உடல் வைக்கப்பட்டு இருந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தி, ரித்தீசின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். இதே போல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சினிமா இயக்குனர் மனோபாலா, நடிகர்கள் ராதாரவி, கார்த்தி, சின்னிஜெயந்த், போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, பரோட்டா சூரி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை ராமநாதபுரம் அருகே நயினார் கோவிலை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான மணக்குடி கிராமத்தில் ரித்தீசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story