திண்டிவனத்தில், ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் - நகைக்கடை உரிமையாளர் பலி


திண்டிவனத்தில், ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் - நகைக்கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 7:52 PM GMT)

திண்டிவனத்தில் ஸ்கூட்டர் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம்,

திண்டிவனம் ராஜாஜி வீதியை சேர்ந்தவர் தரம்சந்த் மகன் முகேஷ்குமார் (வயது 38). இவர் திண்டிவனம் நேரு வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவியும், ஹீராலி(12), டிபாலி(10) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் முகேஷ்குமார் சாப்பிட்டு விட்டு, நகைக்கடைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

ராஜாஜி வீதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ், முகேஷ்குமார் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டருடன் கீழே விழுந்த முகேஷ்குமார் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான முகேஷ்குமாரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story