நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 9:17 PM GMT)

நாகர்கோவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில்,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அதாவது கிருஷ்ணன் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் அறுகுவிளை, கலுங்கடி, புளியடி, செட்டித்தெரு, காணியாளன் புதுத்தெரு, வஞ்சியாதித்தன் புதுத்தெரு, நாகராஜா கோவில் ரத வீதிகள், வடிவீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். மேலும் பொன்னாடை அணிவித்தும், மலர் தூவியும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்றனர்.

அவருடன் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக பிரசாரத்தின் போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

கன்னியாகுமரி தொகுதி முழுவதும் நான் தீவிர பிரசாரம் மேற்கொண்டேன். மக்கள் மத்தியில் பா.ஜனதாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நான் மக்களுக்கு உண்மையாக உழைப்பேன். முழு நேரமும் உழைக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை தான் மக்கள் விரும்புகிறார்கள். அழைத்த நேரத்துக்கு ஓடோடி வந்து குறைகளை தீர்க்கும் நபரை தான் எதிர்பார்க்கிறார்கள். நான் மக்களுக்காக 24 மணி நேரமும் பாடுபடுவேன்.

காங்கிரஸ் வேட்பாளர் கடந்த தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தார். பின்னர் தோல்வி அடைந்ததும் இங்கிருந்து நாங்குநேரிக்கு சென்று வெற்றி பெற்றார். ஆனாலும் அங்கு மக்களுக்காக எந்த திட்டங்களையும் அவர் செயல்படுத்தவில்லை. தற்போது மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். எனவே மக்கள் சிந்தித்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும். குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தால் 20 லட்சம் பேர் பயன் அடைவார்கள். ஏற்கனவே தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால் மாவட்டம் முழுவதும் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story