மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி 2 பேர் படுகாயம்
சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி சாய் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த சுதாகர் என்கிற பெருமாள் (16), லாரன்ஸ் (24) ஆகியோரும் ஒரு மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே உள்ள சுண்டகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சரவணன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சுதாகர், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story