சூளகிரி அருகே பெண் கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள்அமைப்பு


சூளகிரி அருகே பெண் கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள்அமைப்பு
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 4:38 PM GMT)

சூளகிரி அருகே பெண் கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலையிலிருந்து பி.ஜி.துர்க்கம் செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் போதைகுட்டை என்ற இடம் உள்ளது. அங்குள்ள பாறை இடுக்கில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார்.

இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் மேலுமலை கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சூளகிரி போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள். கொலையுண்டு கிடந்த பெண், நீலநிற சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அவரது காலில் மெட்டி, கையில் மோதிரம், தோடு உள்ளிட்டவை இருந்தன. அவரது தலை மட்டும் தண்ணீரில் இருந்தது. தலை மீது பெரிய கல் ஒன்று போடப்பட்டு இருந்தது.

அந்த பெண்ணின் உடல் கிடந்த இடம் அருகே ஆங்காங்கே மது பாட்டில்கள் கிடந்தன. அந்த பெண்ணின் கையில் பிரேம் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த பெண், பணத்திற்காக கொலை செய்யப்படாமல், பலாத்காரம் செய்யப்பட்டு வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் மற்றொரு படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 தனிப்படையினரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்று வட்டாரங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story