பாலியல் பலாத்காரம் செய்து காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை


பாலியல் பலாத்காரம் செய்து காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 April 2019 10:15 PM GMT (Updated: 29 April 2019 7:19 PM GMT)

பாலியல் பலாத்காரம் செய்து காதலன் ஏமாற்றியதால் கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை, பாலன் கோவைக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு சேலத்திற்கு அழைத்து வந்த அவர், அங்கு மாணவியை விட்டு விட்டு தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி இது குறித்து கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்தார்.

அவர்கள் சம்பவம் நடந்த இடம் கோவை என்பதால் அங்குள்ள போலீசில் புகார் செய்யுங்கள் என்று போலீசார் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி கோவை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கும் புகாரை ஏற்காமல் நீங்கள் கிருஷ்ணகிரி போலீசில் புகார் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இவ்வாறு 2 மாதமாக அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்த கல்லூரி மாணவி நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Next Story