பிளஸ்-1, பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்


பிளஸ்-1, பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 2 May 2019 10:15 PM GMT (Updated: 2 May 2019 9:22 PM GMT)

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

மார்ச் 2019 பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள் மற்றும் 2018 மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வுகளில் வருகை புரியாத, தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்விற்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர் நடைபெற உள்ள ஜூன் 2019 பிளஸ்-2, பிளஸ்-1 (பழைய பாடத்திட்டம்) சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட தேர்வர்களுள், ஜூன் 2019 பிளஸ்-1 (பழைய பாடத்திட்டம்), பிளஸ்-2 சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு இன்று (3-ம் தேதி) முதல் வருகிற 8-ம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இறுதி வாய்ப்பு

மேலும், பிளஸ்-2 பொதுத்தேர்வினை (பழைய பாடத்திட்டத்தில்) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் மற்றும் வருகை புரியாதோர், வருகை புரியாத, தேர்ச்சி பெறாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஜூன் 2019 சிறப்பு துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும். பிளஸ்-2 பொதுத்தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதவும், பழைய நடைமுறையின்படி (மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத ஜூன் 2019 பருவம் மட்டுமே இறுதி வாய்ப்பாகும்.

ஜூன் 2019 பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலான நாட்களிலும், பிளஸ்-1 (பழைய மற்றும் புதிய பாடத்திட்டம்) சிறப்பு துணைத் தேர்வு வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலான நாட்களிலும் நடைபெறும். ஜூன் 2019 இடைநிலை, பிளஸ்-1, பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம். தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ. 50, இதர கட்டணம் ரூ. 35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ. 50 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்

தேர்வு முடிவுகள்

தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story