தண்ணீரின்றி காய்ந்து வரும் கரும்பு பயிர்கள் விவசாயிகள் கவலை


தண்ணீரின்றி காய்ந்து வரும் கரும்பு பயிர்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 3:54 PM GMT)

வாணாபுரம் பகுதியில் கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பெருந்துறைப்பட்டு, குங்கிலியநத்தம், பேரயாம்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, வெறையூர், தச்சம்பட்டு, நவம்பட்டு, அள்ளிக்கொண்டபட்டு, பெருமணம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் பிரதானமாகும்.

இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாத காரணத்தினால் நீர்பிடிப்பு பகுதியான ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது மட்டுமல்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது. கிணற்றில் இருக்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது தண்ணீர் இல்லாததினால் கரும்பு பயிர்கள் அதிகளவில் காய்ந்து வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாத காரணத்தினால் ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தண்ணீரின்றி காணப்படுகிறது. விவசாயம் செய்யும் அளவிற்கு தண்ணீர் இல்லாததினாலும் மணிலா, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் இருக்கும் தண்ணீரை கொண்டு எள், கேழ்வரகு உள்ளிட்டவைகளை பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகிறோம்.

மேலும் மழை வரும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது 4 மாதம் ஆகும். நிலையில் தண்ணீர் பற்றாகுறையினால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகிறது.

இருக்கும் பயிரை காப்பாற்றும் அளவிற்காவது மழை வந்தால் நன்றாக இருக்கும் என்றார். தண்ணீர் இல்லாவிட்டால் காய்ந்த கரும்பு பயிர்களை ஆடு, மாடுகளுக்குத்தான் இரையாக கொடுக்க வேண்டும். எனவே மழையை நம்பித்தான் நாங்கள் உள்ளோம்” என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

Next Story