சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணிக்கான பயிற்சி நாளை மறுநாள் நடக்கிறது


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணிக்கான பயிற்சி நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 7:52 PM GMT)

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் என 138 நபர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை தத்தனூர் ராமசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது அஞ்சல் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண் காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலு வலர்கள் அனைவரும் சுழற்சி முறையில் அவர்களுக்குண்டான சட்டமன்ற தொகுதி மற்றும் மேஜை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்போன்களை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகளின் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த விவரங்கள் ஒலிப் பெருக்கி மூலம் தெரிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சிதம்பரம் உதவி கலெக்டர் விசு மகாஜன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு (பொது), கோட்டாட்சியர்கள் சத்தியநாரயணன், ஜோதி, வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story