புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி– மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி, பொதுமக்கள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி– மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி, பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 9:26 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி, மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்தனர். தடுப்பு கம்பிகளை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மகன் ஆனந்த் (வயது 24). இதேபோல் விருதுநகர் மாவட்டம் சென்னல்குடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பெரியமாரியப்பன் (24). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் தங்களது நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவில்பாளையத்தில் இருந்து 2 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தனர்.

புஞ்சைபுளியம்பட்டியில் சத்தி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அங்கு ரோட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி பகுதியில் திரும்பினர். அப்போது எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடு ரோட்டில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கம்பிகளை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு தடுப்பு கம்பிகள் (பேரிகார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் அடிக்கடி நடப்பதாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாலும் தடுப்பு கம்பிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும்,’ என்றனர்.

இதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘தடுப்பு கம்பிகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கூறினார்கள். மேலும் அங்கிருந்த தடுப்பு கம்பிகளை போலீசார் அகற்றினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் புஞ்சைபுளியம்பட்டி– சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story